நற்றிணை 36 - 40 of 400 பாடல்கள்



நற்றிணை 36 - 40 of 400 பாடல்கள்

36. குறிஞ்சி - சீத்தலை சாத்தனார்

குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி
தாழ் நீர் நனந் தலை பெருங் களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி
யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து
ஆனா கௌவைத்து ஆக
தான் என் இழந்தது இல் அழுங்கல் ஊரே

- இரவுக்குறிச் சிறைப் புறமாகத் தோழி சொல்லியது

விளக்கவுரை :

37. பாலை - பேரி சாத்தனார்

பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனந் தலை
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று
இவளடும் செலினோ நன்றே குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின் என் பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
அணங்குடை அருந் தலை உடலி வலன் ஏர்பு
ஆர் கலி நல் ஏறு திரிதரும்
கார் செய் மாலை வரூஉம் போழ்தே

- வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி சொல்லியது

விளக்கவுரை :

38. நெய்தல் - உலோச்சனார்

வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப
பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு
மெல்லம் புலம்பன் பிரியின் புல்லென
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர்
கழி சூழ் படப்பை காண்டவாயில்
ஒலி கா ஓலை முள் மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெள் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே

- தலைவி வன்புறை எதிர் அழிந்து சொல்லியது

விளக்கவுரை :

39. குறிஞ்சி - மருதன் இளநாகனார்

சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின்
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்தி
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவ அல்ல நண்ணார்
அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரு பெயர் கூடல் அன்ன நின்
கரும்புடைத் தோளும் உடைய வால் அணங்கே

- இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது

விளக்கவுரை :

40. மருதம் - அறியப்படவில்லை

நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்
பெரும் பாண் காவல் பூண்டென ஒரு சார்
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்
புனிறு நாறு செவிலியடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல
அகல் துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே

- தலைமகட்குச் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books