நற்றிணை 191 - 195 of 400 பாடல்கள்
191. நெய்தல் - உலோச்சனார்
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி
எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி
அலர் எழுந்தன்று இவ் ஊரே பலருளும்
என் நோக்கினளே அன்னை நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்
அணிக் கவின் உண்மையோ அரிதே மணிக் கழி
நறும் பூங் கானல் வந்து அவர்
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே
- தோழி தலைமகன் சிறைப்புறமாக செறிப்பு
அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது
விளக்கவுரை :
192. குறிஞ்சி அறியப்படவில்லை
குருதி வேட்கை உரு கெழு வய மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய பூழியர்
உருவத் துருவின் நாள் மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை
நீ நயந்து வருதல் எவன் எனப் பல புலந்து
அழுதனை உறையும் அம் மா அரிவை
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின்
ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு
ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே
- இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய
தலைமகன் சொல்லியது
விளக்கவுரை :
193. பாலை - அறியப்படவில்லை
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக
யாரும் இல் ஒரு சிறை இருந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே
- பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள்
சொல்லியது
விளக்கவுரை :
194. குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்
அம்ம வாழி தோழி கைம்மாறு
யாது செய்வாங்கொல் நாமே கய வாய்க்
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர்த் தடக் கை
அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசைத்
தனி நிலை இதணம் புலம்பப் போகி
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை
குன்ற வெற்பனொடு நாம் விளையாட
இரும்பு கவர்கொண்ட ஏனற்
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே
- சிறைப்புறமாகச் செறிப்பு
அறிவுறீஇயது
விளக்கவுரை :
195. நெய்தல் - அறியப்படவில்லை
அருளாயாகலோ கொடிதே இருங் கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப யான் கண்டிசினே
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே
- களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக
ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது
விளக்கவுரை :
